எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கேள்வி

Monday, May 14, 2018

உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி 17 நாட்கள் ஆகியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வதால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வெழுதிய 35 ஆயிரம் பேர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 23-ல் எழுத்துத் தேர்வை நடத்தியது.

இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 10-ல் வெளியிடப்பட்டன. பொதுவாக, கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2017 வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளிடப் படவில்லை.

சிறப்பாசிரியர் தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்பணிக்கான கல்வித்தகுதி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்வு முடிவு தடை இருந்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடையை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 27-ம் தேதியே நீக்கிவிட்டது. உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி 17 நாட்கள் ஆகியும் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது தேர்வெழுதியுள்ள 35 ஆயிரம் தேர்வர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளின் முடிவுகள் இரண்டே மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு விடுகின்றன. இத்தனைக்கும் அத்தேர்வுகள் விரிவாக விடையளிக்கக்கூடிய தேர்வுகள். ஆனால், வெறும் 35 ஆயிரம்பேர் அப்ஜெக்டிவ் வடிவில் எழுதியுள்ள சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட 8 மாதங்களுக்கு மேல் ஆகியும்ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் காலதாமதம் செய்வது ஏன் எனத் தெரியவில்லை.

தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக கடந்த மாதம் ஈரோட்டில் பள்ளிக் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அவர் 15 நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எங்களிடம் உறுதி அளித்தார். ஆனால், அவர் உறுதி அளித்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. குறைந்தபட்சம் இறுதி விடைகளையாவது (Final Key Answer) உடனடியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One