எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கு எழுத்து எழுத பழகி கொடுத்த கலெக்டர்

Saturday, June 2, 2018

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை: மாணவர்களுக்கு
எழுத்து எழுத பழகி கொடுத்த கலெக்டர்

திருவண்ணாமலை, ஜூன் 2: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளான்று, பாடப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சுமார் 40 நாட்கள் விடுமுறை கொண்டாட்டத்தில் குதுகலமாக இருந்த மாணவர்கள், மகிழ்ச்சியுடன் நேற்று பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு சாக்லெட், பூக்கள் போன்றவற்றை கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். அதேபோல், பள்ளி தொடங்கும் முதல் நாளில், முதலாம் வகுப்பு, 6ம் வகுப்பு, பிளஸ்2 போன்றவற்றில் சேருவதற்காக, மாணவர் தங்கள் பெற்றோருடன் திரண்டிருந்தனர். தனியார் பள்ளிகளைப் போல, அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், புதிய கல்வி ஆண்டின் முதல் நாளன்று வகுப்புகள் தொடங்கும் போதே, பாடப்புத்தகங்கள் சீருடை உள்ளிட்ட அரசின் இலவச திட்டங்களின் பயன்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், சீருடை போன்றவை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாடப்புத்தகங்களை முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில், சார்பு நீதிபதி ராஜ்மோகன், தலைமை ஆசிரியர் ேஜாதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் பள்ளிகளின் செயல்பாடுகளை, முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் 5 மாவட்ட கல்வி அலுவலர்கள், 18 வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே இயங்கி வந்த இத்திட்டம், கல்வியின் அடிப்படையை கற்பிக்கும் நிலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வண்ணம், வடிவம், எழுத்து போன்ற அடிப்படை கல்வியை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முயற்சியை திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், முன்பருவ கல்வி ஆரம்ப விழா நேற்று நடந்தது. அதில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு, முன்பருவ கல்வியில் சேர்ந்த குழந்தைகளை உற்சாகபப்டுத்தினார். அப்போது, குழந்தைகளை தமது மடியில் அமர வைத்து, குழந்தையின் நாவில் நெல் மணி கொண்டு தேன் தடவினார்.

மேலும், அரிசி, கோதுமை, நெல் ஆகியவற்றில் குழந்தைகளின் விரல் பிடித்து, தமிழின் முதல் எழுத்தான அ என்பதை எழுத வைத்தார். ஆரம்ப மற்றும் அடிப்படைக் கல்வியை நம்முடைய பாரம்பரியத்துடன் கலெக்டர் தொடங்கி வைத்தது பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் தமிழரசி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாம்பிகை, நகராட்சி ஆணையர் பாரிஜாதம் உட்பட கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One