எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்வி தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்

Wednesday, July 11, 2018

தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான பாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள் மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.
பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.
இதையடுத்து முதன்மை கல்வியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இணை இயக்குனர், இயக்குனர் மூலம் எதையும் தீர்க்க நாட்கள் அதிகமாகும். அதனால் தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். நான் 8 முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு காரணம், யார் எதை கூறினாலும் அதை காது கொடுத்து கேட்பேன். அவர்களை தட்டிக்கொடுப்பேன். அதேபோல நீங்களும் செயல்படுங்கள்.
உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு அந்த பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஏதாவது குறை இருந்தால் தெரியப்படுத்துங்கள். பள்ளிகளுக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து கொடுக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை சேருங்கள். சிறப்பாக பணியாற்றுங்கள். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்–2 படித்து முடித்த உடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அனைத்து பாடங்களும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் புதுமை பள்ளி விருதுகளையும், கனவு ஆசிரியர் விருதுகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. ஆனால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி நடத்தப்படும். அந்த பயிற்சி விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கூட வேலைநேரம் போக மற்ற நேரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக விழாவின் போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமி, மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் இயக்குனர் ச.கண்ணப்பன், இணை இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் தீக்ஷா மற்றும் மின்னணு மதிப்பீடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One