எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப் பள்ளியில் அதிநவீன ஆய்வகத்தைத் திறந்துவைக்கும் துப்புரவுப் பணியாளர்

Friday, April 27, 2018


கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் உருவாகி வரும் அதிநவீன கணினி ஆய்வகம், வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.


கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில்  கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. வகுப்பறை சுவரில் அழகிய ஓவியங்கள், குளிர்சாதன வசதியுடன் ஒரு 'ஸ்மார்ட் கிளாஸ்’, தற்போது அதிநவீன கணினி ஆய்வகம்... இப்படியாக அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது இந்த நடுநிலைப் பள்ளி. பள்ளியின் இந்த அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர் இடைநிலை ஆசிரியர் ப.வசந்தன். கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பள்ளியை மேம்படுத்தினார். பள்ளியில் கொண்டு வரப்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் தொடர்ந்து முகநூலில் பதிவு செய்து வருகிறார். அதிநவீன கணினி ஆய்வகத்தின் திறப்பு விழா பற்றியும் பதிவு செய்திருந்தார்.
















ஓர் அரசு நடுநிலைப் பள்ளியில் 30 கணினிகள், ஏ.சி அறை, இணைய வசதி எனக் கணினி ஆய்வகம் திறக்கப்படுவது இதுவே முதல்முறை. இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த ஆய்வகத்தைத் திறந்து வைப்பவர் கோசலை என்னும் மூதாட்டி. அதே பள்ளியில் 20 ஆண்டுகளாகத் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிபவர்.

இதுகுறித்து ஆசிரியர் வசந்த் கூறுகையில், 'கோசலை அம்மாள் 20 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் வேலை செய்து வருகிறார். கோசலை அம்மாளின் மகள் இங்கு துப்புரவுப் பணியாளர். கோசலை அம்மாள் சம்பளத்துக்கு இங்கு வேலை பார்க்கவில்லை. சேவையாகத்தான் செய்து வருகிறார். நாங்கள் எங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை அவருக்குச் செய்து வருகிறோம். சிறிய அளவில் அவருக்கு ஒரு கடை வைத்துக் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம்.

இது குக்கிராமம் என்பதால் பள்ளி மாணவர்கள் பென்சில், ஸ்கேல் போன்ற ஸ்டேஷனரி பொருள்களை வாங்க வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, கோசலை அம்மாளுக்குச் சிறிய அளவில் கடை வைத்துக் கொடுத்து, அதில் மாணவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைக்கலாம் என்று யோசித்து வருகிறோம். தற்போது பள்ளியில் உருவாகிவரும் அதிநவீன ஆய்வகத்தைத் திறக்க யாரைக் கூப்பிடலாம் என்று ஆலோசித்த வேலையில்தான் 'கோசலை அம்மாதான் இதற்குத் தகுதியான ஆள் என்று தோன்றியது. 20 ஆண்டுகளாகத் பள்ளியைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறார். பள்ளியை தன் வீட்டைப் பாதுகாப்பதைப் போன்று பாதுகாக்கிறார். இந்த ஜூன் மாதம் திறப்பு விழா. கண்டிப்பாக நீங்களும் வாருங்கள்’ என்றார் உற்சாகமாக.

இந்த திறப்பு விழா உண்மையில் ஒரு முன்னுதாரணம்தான்!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One