மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்கள், விஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகச் செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2017 -ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆகியோருக்கு பசுமை விருதுகள் அளிக்கப்பட்டன.
தனியாருக்கு விருதுகள்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, கடலூர் மாவட்டம் ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். தமிழ்நாடு பவர் கம்பெனி, திருவள்ளூர் யுனைடெட் ப்ரூவரிஸ், நாமக்கல் சேஷசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
இதேபோன்று, கல்வி நிறுவனங்கள் பிரிவில் வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சீனிவாசன், கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment