எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய அறிவியல் தினம் பிப் 28 அன்று கொண்டாட காரணம் என்ன?

Thursday, February 28, 2019


‘அது ஒண்ணும் பெரிய ‘ராக்கெட் சயின்ஸ்' இல்ல!' என்று சொல்லும் பலரை நாம் கண்டிருக்கிறோம். ‘ராக்கெட் சயின்ஸ்' அவ்வளவு கடினமானதா?

‘இந்திய விண்வெளி ஆய்வு மைய'த்தின் (இஸ்ரோ) வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ‘ஆம்' என்றே சொல்லத் தோன்றும். ஆனால் அந்த மையம் தன் பாதையில் வந்த தடைகள், பள்ளங்கள், மேடுகள், சுழல்கள் எனப் பலவற்றைச் சமாளித்து இன்று உலகளவில் ‘செவ்வாயைத்' தொட்டதுதான் இமாலய சாதனை!

‘இந்த நாட்டுக்கு ‘இஸ்ரோ' என்ன செய்துவிட்டது?' என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி ‘தேசிய அறிவியல் தினம்' என்று கொண்டாடப்படுகிறதே அதற்குக் காரணமாக இருந்தவரே இஸ்ரோவைச் சார்ந்த டாக்டர் வி.ஆர்.கோவாரிகர் என்பவர்தான்.

இஸ்ரோவின் அங்கமாக இயங்கி வரும் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மைய'த்தின் இயக்குநராக இருந்த கோவாரிகர் பின்னாளில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலராக இருந்தார். 1988-ல் அன்றைய பிரதமரின் ஒப்புதலோடு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சர்.சி.வி. ராமனின் பிறந்தநாளான‌ பிப்ரவரி 28-ம் தேதியை ‘தேசிய அறிவியல் தின'மாக அறிவிக்கச் செய்தார்.

1961-ல் ராக்கெட் ஏவுவதற்குத் தகுந்த ஏவுதளத்தைக் கண்டுபிடிக்க‌ கேரளாவில் உள்ள ஒரு மீனவக் கிராமமான தும்பாவில் அலைந்து திரிந்ததில் தொடங்கி 2014-ல் ‘மங்கள்யான்' செவ்வாய்க் கோளைத் தொட்டது வரையில் இஸ்ரோவின் ஒவ்வொரு கட்டமும் ஆச்சர்யங்களால் நிறைந்திருக்கிறது.

1963-ல் நவம்பர் 21-ம் தேதி தும்பாவிலிருந்து முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அன்றுதான் அதிகாரப்பூர்வமாக இந்திய விண்வெளிப் பயணம் தொடங்குகிறது. 1963 முதல் 2013-ம் ஆண்டு வரை ‘இஸ்ரோ'வின் ஐம்பது ஆண்டு காலச் சாதனையைப் போற்றும் விதமாகத்தான் ஆரம்பத்தில் இந்தப் புத்தகம் உருக்கொண்டது. ஆனால் இடையில் சில நடைமுறைச் சிக்கல்களால் இந்தப் புத்தகம் வெளியாவது தாமதமாகி, சென்ற ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வமாகப் பார்த்தால் இந்திய விண்வெளிப் பயண வரலாறு 1963-லிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே இந்திய விண்வெளித் துறையின் ‘கவுன்ட் டவுன்' தொடங்கிவிட்டது.

ஆம். 1959-ல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ‘விண்வெளியை அமைதிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கான குழு'வைத் தொடங்கிய நிறுவன உறுப்பினராக இந்தியா இருந்துள்ளது. எனில், இந்தத் துறையில் இந்தியாவுக்கு இருந்த, இருக்கும் ஆர்வத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

அடிப்படையான ‘செயற்கைக்கோள் ஏவுகலம்' (எஸ்.எல்.வி. - சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகில்) தொடங்கி, ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., என்று ஏவுகலங்கள் படிப்படியாக உயர, இன்னொரு பக்கம் ஆர்யபட்டா, ஆப்பிள், பாஸ்கரா, இன்சாட் என செயற்கைக்கோள்கள், சந்திரயான், மங்கள்யான் என விண்கலங்கள்... இவை உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கும் இந்திய விண்வெளியின் சாதனைகள்.

இந்தியா, விண்வெளித் துறையில் அடியெடுத்து வைத்த அதே நேரத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விண்வெளிப் பயணத்தில் பல படிகளைத் தாண்டியிருந்தன. அவை அனைத்தும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள். அவை விண்வெளித் துறையில் சாதித்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ஆனால் சுமார் இருநூறு ஆண்டுகள் காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்த, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டிராத ஒரு தேசம் எந்த தைரியத்தில் விண்வெளித் துறையில் நுழைந்து, சாதனை படைத்தது என்பதுதான் இன்றுவரை உலகம் யோசிக்கும் விஷயமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட விண்வெளித் துறையில் தமிழகத்தின் பங்கும், தமிழர்களின் பங்கும் அதிகம். இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளமாக தும்பா அடையாளம் காணப்படுவதற்கு முன்பு கன்னியாகுமரிதான் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அது காந்தக் கோட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்ததால், ஏவுதளம் தும்பாவில் அமைந்தது.

அதேபோல, ராக்கெட் ஏவுவதற்குத் தேவைப்படும் ‘ஸ்பேஸ் குரூட்' எனும் எரிபொருள் சென்னையிலிருந்துதான் 70-களில் பெறப்பட்டது. பி.எஸ்.எல்.வி. ஏவுகலத்துக்கான‌ முக்கிய உதிரி பாகம் தயாரிக்கும் இடம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கிடையில் உள்ள மகேந்திரகிரியில் உள்ளது.

1972-ல் இஸ்ரோவுக்கும் அன்றைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் விண்வெளி ஆய்வு தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இடப்பட்டது. அதன் விளைவாக வேலூருக்கு அருகில் உள்ள காவலூரில் ‘போட்டோகிராபிக் மற்றும் லேசர் ரேஞ்சிங் ஸ்டேஷன்' நிறுவப்பட்டது.

அதேபோல, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, அருணன், வளர்மதி போன்ற தமிழர்களின் பங்களிப்புகளும் இருக்கின்றன.

அதேபோல, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, அருணன், வளர்மதி போன்ற தமிழர்களின் பங்களிப்புகளும் இருக்கின்றன.

இஸ்ரோ எத்தனைதான் சாதனைகள் செய்தாலும் இன்றும், ‘ஆமா... புதுசா ராக்கெட் விடுறதால இந்தியாவுல எல்லாருக்கும் சோறு கிடைச்சிருச்சா?' என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு, 1783-ல் பாரிஸ் நகரத்தில் மனிதனை ஏற்றிக்கொண்டு முதல் பாராசூட் வானில் பறந்தபோது ‘அதனால் என்ன பயன்?' என்று கேட்ட மக்களிடம் அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் எழுப்பிய‌ கேள்விதான் பதில்: ‘புதிதாகப் பிறக்கும் குழந்தையால் என்ன பயன்?'

இந்திய விண்வெளிப் பயணம் சில தகவல்கள்...

* இஸ்ரோவின் ஓர் அங்கமான ‘ப்ரொபெல்லன்ட் இன்ஜினியரிங் டிவிஷன்' ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதியை ‘இயற்கை பாலிமர் தின'மாகக் கொண்டாடுகிறது.

* பிரான்ஸ் நாட்டிலிருந்து பெற்ற ‘வைக்கிங்' எனும் இன்ஜின் தொழில்நுட்பத்தை ‘விகாஸ்' என்று பெயர் மாற்றம் செய்தவர் அன்றைய விண்வெளித் துறையின் கூடுதல் செயலராக இருந்த டி.என்.சேஷன். அந்தப் பெயரின் ஆங்கில வடிவத்தில் ‘இந்திய விண்வெளித் தந்தை' என்று போற்றப்படும் விக்ரம் சாராபாயின் பெயரும் இடம்பெற்றிருக்கும். எப்படியென்றால் இப்படி: VIKAS - VIKram A. Sarabhai.

* இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான 'ஆர்யபட்டா' விண்ணில் ஏவப்பட்ட நாள் 19 ஏப்ரல் 1975. அப்போது தபால் துறையின் பொறுப்பாளராக இருந்த சங்கர் தயாள் சர்மா (முன்னாள் குடியரசுத் தலைவர்) செயற்கைக்கோள் ஏவப்பட்ட நாளையொட்டி நினைவு தபால் தலைகளை வெளியிட்டார். ஆனால் செயற்கைக்கோள் ஏவப்படுவது 20-ம் தேதிக்குத் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டதால் 20-ம் தேதிக்கும் சேர்த்து தபால் தலையை அச்சிட்டு வைத்திருந்தார். எனினும், நிர்ணயித்தபடி 19-ம் தேதியே செயற்கைக்கோள் ஏவப்பட்டுவிட்டதால், 20-ம் தேதிக்குறிய நினைவு தபால் தலைகள் அழிக்கப்பட்டன.

* ‘ஆர்யபட்டா' ஏவப்பட்டபோது, அதனை மாட்டு வண்டியில் ஏற்றி, ஏவுதளத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக வெளிநாட்டுப் பத்திரிகைகள் ஒளிப்படம் எடுத்து கிண்டலடித்தன. ஆனால் அப்படிக் கொண்டு வந்ததற்குக் காரணம் உண்டு. காந்தப்புலம் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து அந்த செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், 'டெலிமெட்ரி, ட்ராக்கிங் மற்றும் கமாண்ட்' தொடர்பான தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யவுமே இப்படிக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

* விண்வெளித் துறையில் 'ரிமோட் சென்ஸிங்' முக்கியப் பகுதி. இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு விவசாயத்துக்கு ஏதாவது உதவ முடியுமா என்று விக்ரம் சாராபாய் யோசித்தார். அதன் விளைவுதான் 60-களின் இறுதியில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'க்ரிஷி தர்ஷன்' நிகழ்ச்சி.
அ.முரளி,
அறிவியல் ஆசிரியர்
அரிச்சந்திரபுரம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One