எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழை மக்களுக்கு பயன்படுத்து என்பார்கள் நிருபித்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் !! திரு K.S.கந்தசாமி

Friday, September 28, 2018





திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி, தனது தாய் அனிதா , தந்தை வெங்கடேசன்  ஆகியோரை இழந்து மிகவும் ஏழ்மையான நிலையில் தனது தங்கை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் ஆனந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் கணிகிலுப்பை அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கே.எஸ்.கந்தசாமி  அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று அளிக்கப்பட்டது.




மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பியுடன் சேர்ந்து அவரது வீட்டில் மதிய உணவு உண்டு சிறப்பி்த்து,  புதிய மிதிவண்டி மற்றும் பழங்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆனந்திக்கு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பிரசாதம் வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.








      மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில் , திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13.08.2018 தேதி அன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்காக அலுவலகத்தில் நுழையும் போது செல்வி.வெ.ஆனந்தி கண்ணீர் நிறைந்த கண்களுடன் வராண்டாவில் என்னை சந்திக்க காத்து கொண்டிருந்தார். அவரை அருகில் அழைத்து எதற்காக இங்கு வந்தாய் என கேட்ட போது, தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. இல்லையெனில் நாங்கள் அனைவரும் இறப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியதை கேட்டவுடன் அவரிடம் உனது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறேன் என ஆறுதல் தெரிவித்து எனது அறைக்கு அழைத்து சென்று அமர வைத்து உன் குறையை சொல் என்று கேட்ட பிறகு இந்த 19 வயது பெண்ணின் நிலையை கேட்பதற்கு கூட வலிமையான இதயம் வேண்டும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.

   எனக்கு தாய், தந்தை இருந்தார்கள், தற்போது இருவரும் உயிருடன் இல்லை.  எனது உடன்பிறந்த இளைய சகோதரி மற்றும் இளைய சகோதரர், வயதான பாட்டி மட்டும் உடன் இருக்கிறார்கள். என்னுடைய தாய் கனிகிலுப்பை அரசு ஆரம்ப பள்ளி சத்துணவு  மையத்தில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வந்தார். எனது தந்தை உடல்நிலை மிகவும் சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல இயலாத நிலையில், எனது தாயின் வருமானத்தில் மட்டுமே எனது குடும்பம் நடந்து வந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் +2 படிக்கும் போது எனது அம்மா திடீரென இறந்துவிட்டார். எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கிடைக்கப்பெற்ற இறப்புகால பணப்பயன் தொகையினை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்தி அவரை காப்பாற்றி வந்தோம். அதன் பிறகு நான், எனது வயதான பாட்டியுடன் விவசாய கூலி வேலைக்கு சென்று உடல்நிலை சரியில்லாத தந்தை, தங்கை மற்றும் தம்பி ஆகியோரை காபாற்றி வந்தேன். ஓராண்டுக்கு முன் 2017-ல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையும் இறந்து விட்டார். தற்போது எனது பாட்டியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் நான் மட்டுமே விவசாய கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் எனவும், என்னாலும் இப்படிப்பட்ட கடுமையான உடலுழைப்பு வேலைகளை செய்ய முடியவில்லை எனத் தெரிவித்தார்.

     எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கருணை அடிப்படையில் பணி அளிக்க கோரி மனு அளித்தும், 21 வயதினை நிறைவு செய்த பின்னர் தான் வேலைக்கு தகுதி எனத் தெரிவித்து வேலையும் கொடுக்கவில்லை. எனக்கு 21 வயதாக இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகளும் தொடர்ந்து இந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டால், நாங்கள் உயிருடன் வாழ்வதற்கு வழியில்லை. நான் கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கே பத்தாத நிலையில், நானும் எனது தங்கையும் +2 படித்தாலும் கல்லூரியில் சென்று படிக்க இயலவில்லை. எனது தம்பி மட்டும் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்ற விவரங்களை தெரிவித்தார்.

 இந்த பெண் தனது சூழ்நிலையினை விளக்கியவுடன் கனத்த இதயத்துடன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து விவரம் கேட்ட போது, இவருக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்கள். இந்த பெண்னிற்கு உடனடியாக வேலை கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் வேலை கிடைக்கும் போது அந்த குடும்பமே இல்லாமல் போகும் துயர நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து, அரசு செயலருடன் தொடர்பு கொண்டு இந்த சூழ்நிலையினை விளக்கி இதனை மிகவும் சிறப்பினமாக கருதி அவரின் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்ய அனுமதி அளிக்குமாறு கோரியதுடன் அதற்காக முன்மொழிவினையும் அனுப்பி வைக்கப்பட்டது. அன்றே அப்பெண்னிற்கு இரண்டு மாதம் வரை குடும்ப செலவிற்காக தேவைப்படும் தொகையும் கொடுத்து, அரசு வேலை கிடைக்கும் வரை கூலி வேலைக்கு செல்ல வேண்டாம் இத்தொகையினை கொண்டு எவரையும் எதிர்பார்க்காமல் குடும்பத்தினை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி, நல்ல எதிர் காலம் உனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையினை தெரிவித்து அனுப்பி வைத்தேன்.

  இந்நிலையில், உடல்நிலை நலிவுற்றிருந்த அவரது பாட்டியும் 24.08.2018 இறந்து விட்டார். இதன் பிறகு, பெற்றோரோ அல்லது பெரியவர்களோ யாரும் இல்லாத இந்த சூழ்நிலையில் செல்வி.வெ.ஆனந்தி என்பவரை மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தினரையும் வறுமை நிலையிலிருந்து முற்றிலுமாக மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவரது தங்கை செல்வி.வெ.அமுதா என்பவரை நேரில் வரவைத்து உனக்கு நிரந்தரமான வாழ்க்கை வேண்டுமென்றால் கல்லூரி கல்வியினை கட்டாயம் தொடர வேண்டும் என அறிவுறுத்தி, ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆண்டுகளுக்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் B.Sc ., Bio - Chemistry படிப்பில் சேர்த்து தற்போது படித்து வருகிறார். மேலும், கல்லூரி கல்வியினை பயில வேண்டும் என்ற கனவு முடிந்து விட்டதாக கருதிய செல்வி.வெ.ஆனந்திக்கும் அண்ணாமலை பல்கலை கழக தொலை தூரக் கல்வியில் 3 ஆண்டு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை அளிக்கப்பட்டு பி.ஏ. தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு சேர்த்து தற்போது படித்து வருகிறார்.

  இதன் அடிப்படையில் இன்று 26.09.2018 இவர் பொருட்டு சிறப்பினமாக பெறப்பட்ட அரசாணை அடிப்படையில் இவரை கருணை அடிப்படையில் சமையல் உதவியாளர் பதவிக்கு பதிலாக கல்வித் தகுதியின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் ஆக ஆரணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமன ஆணை அளிக்கப்பட்டு இன்று முதல் பணியில் சேர்ந்தார். தனது விடாமுயற்சியில் வெற்றி பெற முடியும் என்று எனக்கு பாடம் உணர்த்திய 19 வயது ஆனந்தி வாழ்க வளமுடன்’ என்றார்.

        இந்நிகழ்வின் போது, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் (பொ) உமாமகேஸ்வரி வட்டாட்சியர் கிருஷ்ணசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One