ஸ்வீடன் நாட்டு அரசு ஒரு முடிவுடன் தான் இருக்கிறது! வரும், 2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலிய வாகனங்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, மாசு இல்லாத பல புதிய தொழில்நுட்பங்களை ஸ்வீடன் பரிசோதித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அண்மையில் சாலைகளில் மின் தண்டவாளங்களை பதித்து, கார், பேருந்து போன்றவற்றுக்கு அதன் மூலம் மின்சாரம் வினியோகிக்கும் திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கத் துவங்கியுள்ளது.
'இ ரோட் ஆர்லாண்டா' என்ற அந்தத் திட்டத்தின்படி, 2 கி.மீ.,க்கு, சாலையின் நடுவே உலோகத்தாலான ஒற்றை தண்டவாளம் பதிப்பிக்கப்படுகிறது.
இந்த தண்டவாளத்தை கடக்கும் மின் வாகனங்களின் அடிப்பகுதியில் உள்ள கம்பி போன்ற அமைப்பு கீழே இறங்கி, தண்டவாளத்தை தொடும்போது, வாகனங்களின் மின்கலனில் மின்னேற்றம் நடக்கும்.
இரண்டு ஆண்டுகள் சோதனைக்குப் பின், இந்த வசதியில் இருக்கும் நன்மை, தீமைகளை அலசி, ஸ்வீடனின் பிற பகுதிகளுக்கும் இத்திட்டத் தை விரிவாக்க, அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.
எது எப்படியோ, மின் வாகனங்களுக்குத் தான் இனி எதிர்காலம் என்று ஆகிவிட்டதால், அந்த வாகனங்களுக்கு போகிற போக்கிலேயே மின்னேற்றம் செய்யும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment