எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

BE - பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

Monday, April 22, 2019




பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தக் கலந்தாய்வு 2017-18 கல்வியாண்டு வரை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களைப் போக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் ஆன்-லைன் பி.இ., கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய நடைமுறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே, கலந்தாய்வில் பங்கேற்கும் வசதி ஏற்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில், வீட்டுக்கு அருகில் இருக்கும் கலந்தாய்வு உதவி மையத்துக்கு மாணவர் சென்றால் போதும் என்ற நிலை உருவானது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அதிவேக வலைதள வசதியுடன் அமைக்கப்பட்டன. இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சூரப்பா, பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

உயர் கல்வித் துறைச் செயலர் உள்பட பலரின் கார்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பெட்ரோல் நிரப்பப்படுவதை ரத்து செய்தது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ரத்து செய்தது என பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை சூரப்பா எடுத்தார். இது பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், பி.இ., கலந்தாய்வை நடத்தும் கலந்தாய்வுக் குழுவில் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தனைச் சேர்த்தும், மேலும் சில அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தும் உயர் கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு, பி.இ., கலந்தாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் தனக்குத் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா புகார் தெரிவித்ததோடு, குழுவின் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக 2019-20 கல்வியாண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.இ. கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 31ம் தேதி கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One