எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளியை மீட்டெடுத்து அசத்தல்: ஆசிரியர்களாக மாறிய கிராமத்து பெண்கள்

Tuesday, June 25, 2019


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்திராம்பட்டு அரசு துவக்கப் பள்ளியில், போதிய ஆசிரியர்கள் இல்லாததால், கிராமத்து பெண்களே, பாடம் நடத்தி, அசத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு அரசு துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என, இருவர் மட்டுமே இருந்தனர். 3ம் தேதி, தலைமை ஆசிரியர், விருப்ப ஓய்வு பெற்றார். எஞ்சிய, இடைநிலை ஆசிரியர் ஒருவர் மட்டும் பாடம் நடத்தி வந்தார்.ஆசிரியர்கள் இல்லாததால், இப்பள்ளியில் படிக்கும், தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்க்கவும், புதிதாக வரும் மாணவர்களையும், வேறு பள்ளியில் சேர்க்கவும், பெற்றோர் முடிவெடுத்தனர்.இதற்கிடையே, கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் கூடி, 'மிகவும் பழமையான இப்பள்ளியில், மாணவர்கள் குறைவாக இருந்தால், அரசு தொடர்ச்சி 2ம் பக்கம்அரசு பள்ளியை...முதல் பக்கத் தொடர்ச்சிபள்ளியை மூடி விடும். இதனால், நாமே, இப்பள்ளியில் பாடம் நடத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்' என, முடிவெடுத்தனர்.இப்பகுதி இளைஞர்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று, மாணவர் சேர்க்கை குறித்து, வலியுறுத்தினர். இதன் பலனாக, 17 மாணவர்கள் மட்டும் இருந்த இப்பள்ளியில், தற்போது, 32 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மேலும், இக்கிராமத்தைச் சேர்ந்த மற்றும் வெளியூர்களில் இருந்து, மருமகள்களாக வாழ வந்துள்ள, படித்த பெண்கள் நான்கு பேர், ஊதியம் ஏதுமின்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இவர்கள், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மாற்றி, மாற்றி வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.இக்கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர் தங்கவேலன் என்பவர், உடற்கல்வி ஆசிரியராகவே மாறி, மாணவர்களுக்கு, தினமும் உடற்பயிற்சி கற்றுத் தருவதுடன், விளையாட்டு போட்டிகளிலும் ஈடுபடுத்தி வருகிறார்.மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை, இப்பகுதியைச் சேர்ந்த பெரியோர்கள் வழங்கி வருகின்றனர். மதிய உணவும், தரமாக வழங்கப்படுகிறது. இதையறிந்த, பக்கத்து கிராம மக்களும், இக்கிராம மக்களை பாராட்டுகின்றனர்.'இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமித்து, இடிந்த நிலையில் உள்ள சுற்றுச் சுவர்களை சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கிராம மக்களின் முயற்சியை பாராட்ட விரும்புவோர், முன்னாள் ராணுவ வீரர், தங்கவேலனை, 96299 30269 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதே பள்ளியில், ஆரம்ப கல்வி பயின்றேன். பி,ஏ., ஆங்கிலம் இளங்கலை மற்றும் பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன். மாணவர் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை காட்டி, நான் படித்த இந்த பள்ளியை மூடிவிடக் கூடாது என்ற நோக்கத்தில், மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறேன். இதில், எங்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.பி.பரமேஸ்வரி, புத்திராம்பட்டு.

தர்மபுரி மாவட்டம், அரூர் கிராமத்தில்இருந்து, திருமணம் முடித்து, மருமகளாக இந்த ஊருக்கு வந்துள்ளேன். பி.ஏ., - பி.எட்., முடித்துள்ளேன். இது, என் கணவர் படித்த பள்ளி. ஆசிரியர் இல்லாததாலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இப்பள்ளி நலனுக்காக, பாடம் நடத்தி வருகிறேன்.ஜி.சசிகலா, அரூர்.
இப்பள்ளியில் நான் படித்தபோது, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தனர். பள்ளியில் ஆசிரியர்கள் குறைந்த காரணத்தால், மாணவர்கள் சேர்க்கையும் குறைந்தது. மாணவர் சேர்க்கை குறையக்கூடாது என்ற நோக்கத்தில், ஆசிரியர் பயிற்சி முடித்த நான், என்னால் முடிந்த அளவிற்கு, பாடம் நடத்திவருகிறேன்.புவனேஸ்வரி,புத்திராம்பட்டு.
நான், சங்கராபுரம் தாலுகா, தியாகராஜபுரத்தில் இருந்து, புத்திராம்பட்டிற்கு மருமகளாக வந்தேன். என் கணவர், அவரது தம்பி, தங்கை அனைவரும் இப்பள்ளியில் படித்தவர்கள். இப்பள்ளியின் பெருமையை, அடிக்கடி என் கணவர் கூறுவார். அந்த ஆர்வம் காரணமாக, ஆசிரியர் பயிற்சி முடித்த நான், பாடம் நடத்தி வருகிறேன்.எ.விஜயலட்சுமி,தியாகராஜபுரம்.
.நான், ராணுவத்தில், 30 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளேன். நானும், சிறு வயதில் இந்த பள்ளியில் தான் படித்தேன். நான் படித்த என் பள்ளியில், ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது, வேதனையாக உள்ளது.பள்ளியை இழுத்து மூடி விடக்கூடாது என, மாணவர்களுக்கு, மாலை நேரங்களில், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவைகளை கற்றுத் தருகிறேன்.தங்கவேலன்,புத்திராம்பட்டு.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One