எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்வி, ஒழுக்கம், சுகாதாரத்தில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

Tuesday, September 3, 2019


தனியார் பள்ளி மாணவர்களே விரும்பி சேரும் வகையில், கல்வி, ஒழுக்கம், சுகாதாரத்தில், அரசு தொடக்கப் பள்ளி அசத்துகிறது.சென்னை, செங்குன்றம் அருகே, விளாங்காடு பாக்கம் ஊராட்சி, தர்காஸ் பகுதியில், புழல் ஊராட்சி ஒன்றிய, அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த, 2016ல் வீசிய, 'வர்தா' புயலால், பள்ளிக் கட்டடம் சேதமடைந்தது. பள்ளியின் சுற்றுச்சூழல் மிக மோசமாக இருந்தது.இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை, கோமளீஸ்வரியின் முயற்சி மற்றும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பால், புது கட்டடம் கிடைத்தது.சேதமடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு, 2017 - 18ம் கல்வியாண்டில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டது.மேலும், அதே ஆண்டு, 11.80 லட்சம் ரூபாய் செலவில், மற்றொரு புதிய கட்டடம் கட்டப்பட்டது.தனியார் நிறுவனம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை அமைத்து கொடுத்துள்ளது.இந்தாண்டு, இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 125 மாணவ - மாணவியரும், மழலையர் வகுப்பில், 25 பேரும் படிக்கின்றனர்.இங்கு படிக்கும், 80 சதவீத மாணவர்கள், ஆங்கில வழி கல்வியில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.அதற்கு ஏற்றது போல், எழுத்துகளின், 'ஒலி' வடிவில், ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. அதனால், அவர்களுக்கு, தமிழ் வார்த்தைகளை படிப்பது போல், எளிதானதாக இருக்கிறது.அனைத்து, மாணவ - மாணவியரும் கல்வி, ஒழுக்கம், சுகாதாரத்தை கடைப்பிடிக்கின்றனர்.பள்ளியில், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் மற்றும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், 'ஜங் புட்' எனப்படும், நொறுக்கு தீனிகளின் பயன்பாடு, முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு, தரமான கல்வியுடன், உடல் நலத்தை காக்கும், நல்ல உணவு பழக்கங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.வேர்க்கடலை, பொட்டுக்கடலை எனப்படும் உடைத்த கடலை, எள் உருண்டை, கேரட், பப்பாளி, கீரை பொரியல், மீன் ஆகியவற்றை விரும்பி சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.அதற்காக, பொட்டுக்கடலை, எள் உருண்டை ஆகியவற்றை ஆசிரியைகளே வாங்கி, மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து மகிழ்கின்றனர்.திறந்தவெளியை, பொது கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது.

கழிப்பறைக்கு சென்று திரும்பும் போது, கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்.மழைநீர் சேகரிப்பு, மரங்கள் வளர்ப்பது, தோட்டம் அமைப்பது என, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், அவர்களை, ஆசிரியைகள் ஈடுபாடு கொள்ள செய்துள்ளனர்.இதன் காரணமாக, பள்ளியை சுற்றி, மரங்கள் அடர்ந்து வளர்ந்து, காற்றோட்டமான சூழல் உள்ளது. இங்கு, படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்கின்றனர். சிலர், வீணாகும் பிளாஸ்டிக் பாட்டில், தென்னை, பனை மட்டைகளால் படகு, ராக்கெட் போன்ற பொருட்களை செய்து, வகுப்பறைகளில் அலங்காரமாக வைத்து உள்ளனர்.ஹர்சினி என்ற, ஐந்தாம் வகுப்பு மாணவி, தினமும், ஐந்து திருக்குறள் மனப்பாடம் செய்து, பள்ளியில், காலை நேர கடவுள் வாழ்த்து நிகழ்ச்சியில் கூறுகிறார்.அவர், பள்ளி நிகழ்ச்சிகளின் போது, 50 திருக்குறள் வரை, மனப்பாடமாக சொல்கிறார்.அதே போன்று, முரளிதரன் என்ற மாணவன், மனப்பாடமாக கணக்குகளை கூறி அசத்துகிறார்.இதனால், கடந்தாண்டு, 96 மாணவ - மாணவியர் மட்டுமே இருந்த நிலையில், இந்தாண்டு, அந்த எண்ணிக்கை, 150 ஆக உயர்ந்துள்ளது.குறிப்பாக, தனியார் பள்ளிகளில் படித்த, 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், இங்குசேர்ந்துள்ளனர். தண்ணீர் : இந்த பள்ளிக்கான, இரண்டு ஆழ்துளை குழாய் கிணறுகளும், நீர்மட்டம் குறைந்ததால் செயல் இழந்து விட்டன.

இப்போது, ஊராட்சி மன்ற குழாயில் கிடைக்கும் நீரை, பள்ளியின் தேவைக்கு பயன்படுத்துகின்றனர்.ஊராட்சி மன்ற குழாயில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கலாம். அதற்கு, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பொருளாதார வசதியின்றி உள்ளது. பள்ளி சுற்றுச்சுவரின் உயரம் குறைவாக உள்ளது. இதனால், விடுமுறை நாட்களில், விஷமிகள் உள்ளே நுழைந்து, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை, சேதப்படுத்தி விடுகின்றனர்.மேலும், சாலை மட்டத்தில் இருந்து பள்ளி வளாகம் கீழே இருப்பதால், பலத்த மழையின் போது, தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டால், பள்ளி மேலும் வளர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One