எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளிவையுங்கள்,தேர்வை தள்ளி வைக்காமல் தேர்வை நடத்தினால் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்புக்காப்பீடு செய்யுங்கள் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை.

Friday, May 29, 2020




புதுக்கோட்டை,மே.29:10 ம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளிவையுங்கள்,தேர்வை தள்ளி வைக்காமல் தேர்வை நடத்தினால் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்புக்காப்பீடு செய்யுங்கள் என  தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ள நிலையில், நமது இந்திய தேசத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம்,  மக்கள் பாதுகாப்பில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த வந்த தமிழக அரசு தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நேரத்தில் கோரிக்கையாக வைக்கின்றேன்.

பள்ளி மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் ஆகியோருடைய நலன்களைக் கருதி மக்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கின்ற அரசாங்கம், இன்னும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாத சூழலில்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் தொற்றுநோய் சூழ்ந்திருக்கும் , சமூகப்பரவலாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் நடத்த முன்வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய அழுத்தம் இருப்பினும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும், மன நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசே அழுத்தம் கொடுத்தாலும்,
ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது சாதாரண விஷயம் அல்ல. தோராயமாக 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைக்கொண்டு நடத்தப்பட வேண்டிய விசயமாகும்.  இயன்றவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக்கூடிய முடிவினை கைவிட வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கையாக இருந்தாலும் கூட,
அவசியம் நடத்தியே தீர வேண்டுமென அரசாங்கம் நினைத்தால் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தேர்வை நடத்த திட்டமிடலாம். ஆனால் முதல் மூன்று வாரங்கள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற வேண்டும். தனது ஆசிரியர்களை வகுப்பறையில் சந்திக்காமல் நேரடியாகத் தேர்வறையைச் சந்திக்கும் சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது.
உளவியல் ரீதியாக மாணவர்களிடம் பல்வேறு சிக்கல்களை இந்த கொரோனா ஏற்படுத்தி இருக்கும். அவற்றைக் களையாமல் தேர்வறைக்கு அனுப்புவதென்பது சரியான செயலாக இருக்காது.



ஆனால் அதேநேரத்தில் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும்,
தேர்வுப்பணியில் ஈடுபடக் கூடிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழக அரசு தாமாகவே முன்வந்து அரசு சிறப்பு மருத்துவக் காப்பீடு செய்வதுடன், தேர்வில் பங்கேற்ற பிறகு, மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ அல்லது பணியாளர்களுக்கோ கொரோனா  தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்ச ரூபாயை வழங்குவதுடன்,
உயிர்பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்கிற அரசு உத்தரவு அறிவித்துவிட்டு,
தேர்வை நடத்த திட்டமிடுவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். இது மனரீதியாக அவர்களுக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும்.

எனவே இதுகுறித்து உரிய ஆலோசனை செய்து, தக்கமுடிவு எடுக்கும்படி தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One