எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு 2 பேர் போட்டி: நியமன குழப்பத்துக்கு கல்வி அதிகாரி விளக்கம்

Saturday, September 21, 2019




பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு கடிதத்துடன் வந்த ஆசிரியருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, இணையவழியில் உத்தரவைப் பெற்று வந்தவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது தொடர்பாக கல்வி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (49). இவர், தற்போது சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன், நாமக்கல் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நாகராஜ் முருகன் பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் சேருவதற்காக, நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஆசிரியர் நடராஜன் புதன்கிழமை வந்ததாகவும், அந்தக் கடிதத்தை பார்வையிட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் ஆகியோர் தங்களது பார்வைக்கு இன்னும் கடிதம் சென்னை அலுவலகத்தில் இருந்து வந்து சேரவில்லை. அதனால் ஒரு நாள் காத்திருங்கள் என்று அவரிடம் கூறியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், பள்ளி துணை ஆய்வாளராகப் பணியாற்றிவரும் கொல்லிமலையைச் சேர்ந்த ஆசிரியர் பெரியசாமி (48) என்பவர், நாமக்கல் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் வந்த உத்தரவுக் கடிதத்துடன், முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தார். அந்த உத்தரவைப் பார்த்த அதிகாரிகள், பெரியசாமியை பணியில் சேர உடனடியாக அனுமதித்தனர். இதனால், ஏற்கெனவே கடிதத்துடன் வந்த ஆசிரியர் நடராஜன் அதிருப்திக்குள்ளானார். அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைக்கு, ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
நாமக்கல் மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.ராமு கூறியது: பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு, கடிதத்துடன் வந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இணைய வழியில் பணி நியமன ஆணை வந்ததாகக் கூறியவருக்கு உடனே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் காத்திருக்க வைத்து, முதலில் வந்தவருக்கு பதவி வாய்ப்பு மறுக்கப்பட்ட செயலுக்கு, ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என்றார்.
இது குறித்து நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் கூறியது: துணை ஆய்வாளர் பதவிக்கு, சென்னை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு கடிதம் வரும். அந்தக் கடிதமும், கொண்டு வந்தவரின் கடிதமும் சரியானதாக உள்ளதா என பார்த்தபின் தான் நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்படும். ஆசிரியர் நடராஜன் கொண்டு வந்தது சரியானதா என்பதை ஆய்வு செய்வதற்காகக் காத்திருக்குமாறு கூறினோம்.
இதற்கிடையே, திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த பெரியசாமிக்கு, பள்ளி துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சலில் கடிதம் வந்தது. அவரும் அதற்கான கடிதத்துடன் வந்திருந்ததால், பதவியில் நியமித்தோம். முறைகேடாக நியமனம் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் கடிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டதால், மற்றொருவரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிடும். இதில், யாருக்கும் ஆதரவாக நாங்கள் நடந்து கொள்ளவில்லை என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One